நித்யாவும் & அரசும், சாருவும் & குருவும்

நித்யா

nimages
வாயென்று சொல்லி மனமொன்று சிந்தித்து
நீயொன்று செய்யல் உறுதி நெடுந்தகாய்
நீயென்றிங் குன்னைத் தெளிவன் தெளிந்தபின்
பேயென்றிங் கென்னைப் பிறர்தெளி யாரே

--திருமந்திரம்: ஆறாம் தந்திரம் - 13(அபக்குவன்) பாடல் -4

யாதொரு செயலிலும் `மனம், மொழி உடல்` என்னும் மூன்றும் ஒருவழிப்பட நிற்றல் வேண்டுமன்றி, அவை தனித்தனி வேறு வேறு வழிப்பட நிற்றல் கூடாது.அவ்வாறுபட நிற்பின், உன்னை யான், `பக்குவம் வாயாத இழிமகன்` என்று உறுதி யாகக் கொண்டு விலக்குவேன். ஆனால், உணர்விலாதோர் என்னைப் வெகுளியால் பேய்த்தன்மை எய்தியவன் என இகழ்வர்.

 

(திருமந்திரம் சுமார் 1500 ஆண்டுகள் முற்பட்டது. அபக்குவன் -பக்குவமற்றவன்)

 

அரசு

emblem images

பஞ்சத் துரோகத்திப் பாதகர் தம்மை
யஞ்சச் சமயத்தோர் வேந்தன் அருந்தண்டம்
விஞ்சச்செய் திப்புவி வேறே விடாவிடிற்
பஞ்சத்து ளாய்புவி முற்றும்பா ழாகுமே

--திருமந்திரம்: ஆறாம் தந்திரம் - 13(அபக்குவன்) பாடல் -5

பஞ்சமா பாதகத்தோடு ஓத்த, வாயொன்று சொல்ல, மனம் ஒன்று சிந்திக்க, மெய்யொன்று செய்தலாகிய இப் பாதகத்தைச் செய்வோரையும் அரசன் அவ்வமையம் பார்த்து யாவரும் அஞ்சும்படி பொறுத்தற்கரிய தண்டனையை மிகச் செய்து திருத்தாவிடின், அவனது நாடு பஞ்சத்துட்பட்டு வருந்திப் பின் உருவும் அழிந்துவிடும்.

 

சாரு

charu images

குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே

--திருமந்திரம்: ஆறாம் தந்திரம் - 13(அபக்குவன்) பாடல் -1

குருடான இருவர் தமக்குள் கண்ணாமூச்சு விளையாடி, இருவரும் பாழுங் குழியில் விழுந்தாற் போலப், பக்குவம் இல்லாத சிலர் தமது அறியாமையைப் போக்கும் ஆற்றலுடைய நல்ல குருவைக் கொள்ளாமல், போலிக் குருவைக் குருவாகக் கொண்டால் இருவரும் துன்பத்தில் வீழ்ந்து அழுந்துவார்கள்.

 

குரு

shiva n38902941472_1623

பாசத்தைக் காட்டியே கட்டுப் பறித்திட்டு
நேசத்த காயம் விடுவித்து நேர்நேரே
கூசற்ற முத்தியிற் கூட்டலால் நாட்டகத்
தாசற்ற சற்குரு அப்பர மாமே.

--திருமந்திரம்: ஆறாம் தந்திரம் - 1(சிவகுரு தரிசனம்) பாடல் -2

 

உயிர்ச் சார்பும் பொருட் சார்புமாகிய மன இயல்பைத் தெளிவித்து, அவற்றுக்கு இடையேயான கட்டினை அறுத்து, உடற்பற்றிலிருந்து ஆன்மாவை விடுவி்த்து, இகழ்ச்சிக்கு நாணுதல் இல்லாத முத்தி நிலையை பெறச் செய்தலால், யாவராலும் போற்றப்படுகின்ற அப்பரமமே சற்குரு.

 

8 கருத்துகள்:

  1. தலைவா! எங்கியோ போயிட்டீங்க.....

    ஆனாலும் இந்த ஆளுங்களுக்கு திருமந்திரம் ஒப்பீடு கொஞ்சம் ஓவரோ!!??

    பதிலளிநீக்கு
  2. வாங்க பாலா,

    இது இன்னைக்கு, நேற்றைக்கு ஆரம்பித்த கூத்தா ? 1500 வருடங்களுக்கு முன்னமே அப்படி ?! இவர்களை பற்றி நாம் எதுவும் புதிதாக சொல்லவே தேவையில்லை.

    இன்றைய போலி சாமியார்களை வைத்து எந்த தத்துவமும் இல்லை. தத்துவங்களை சாமியார்கள் கை கொள்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  3. அருமை.

    மூவ்வாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மூலன் இந்த மூடர்களுக்காக உரைத்தது போல இருக்கிறது. அதை நீங்கள் பகுத்தவிதம் அருமை.

    பதிலளிநீக்கு
  4. வாங்க ஸ்வாமி ஓம்கார்,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  5. 1.நித்தியானந்தரின் இயல்பைப் பற்றியும், 2. அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைப் பற்றியும், 3.அதனால் சீடர்களின் நிலைமைப் பற்றியும், 4. ஒரு குருவானவர் எப்படி இருப்பார் என்பதுப் பற்றியும் தங்கள் கருத்துக்களை திருமந்திரத்தின் வாயிலாக எடுத்து இயம்பிய விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  6. @VijayaSamundeeswari
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  7. இரண்டு ஓட்டுக்கள் போட்டு பாராட்டும் அளவிற்கு படைத்த உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

    தமிழ்மணம் சேர்ந்து விட்டதா நண்பரே?

    பதிலளிநீக்கு
  8. @ஜோதிஜி வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க. தமிழ்மணம் ஓட்டு பட்டையில் எதோ பிரச்சிணை இருக்குதுங்க. தானாகவே வேலை செய்யாமல் போய் விட்டது. மீண்டும் இணைக்க வேண்டும் போல.

    பதிலளிநீக்கு

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)