நித்யா
![]()
வாயென்று சொல்லி மனமொன்று சிந்தித்து
நீயொன்று செய்யல் உறுதி நெடுந்தகாய்
நீயென்றிங் குன்னைத் தெளிவன் தெளிந்தபின்
பேயென்றிங் கென்னைப் பிறர்தெளி யாரே
--திருமந்திரம்: ஆறாம் தந்திரம் - 13(அபக்குவன்) பாடல் -4
யாதொரு செயலிலும் `மனம், மொழி உடல்` என்னும் மூன்றும் ஒருவழிப்பட நிற்றல் வேண்டுமன்றி, அவை தனித்தனி வேறு வேறு வழிப்பட நிற்றல் கூடாது.அவ்வாறுபட நிற்பின், உன்னை யான், `பக்குவம் வாயாத இழிமகன்` என்று உறுதி யாகக் கொண்டு விலக்குவேன். ஆனால், உணர்விலாதோர் என்னைப் வெகுளியால் பேய்த்தன்மை எய்தியவன் என இகழ்வர்.
(திருமந்திரம் சுமார் 1500 ஆண்டுகள் முற்பட்டது. அபக்குவன் -பக்குவமற்றவன்)
அரசு
பஞ்சத் துரோகத்திப் பாதகர் தம்மை
யஞ்சச் சமயத்தோர் வேந்தன் அருந்தண்டம்
விஞ்சச்செய் திப்புவி வேறே விடாவிடிற்
பஞ்சத்து ளாய்புவி முற்றும்பா ழாகுமே--திருமந்திரம்: ஆறாம் தந்திரம் - 13(அபக்குவன்) பாடல் -5
பஞ்சமா பாதகத்தோடு ஓத்த, வாயொன்று சொல்ல, மனம் ஒன்று சிந்திக்க, மெய்யொன்று செய்தலாகிய இப் பாதகத்தைச் செய்வோரையும் அரசன் அவ்வமையம் பார்த்து யாவரும் அஞ்சும்படி பொறுத்தற்கரிய தண்டனையை மிகச் செய்து திருத்தாவிடின், அவனது நாடு பஞ்சத்துட்பட்டு வருந்திப் பின் உருவும் அழிந்துவிடும்.
சாரு
குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே--திருமந்திரம்: ஆறாம் தந்திரம் - 13(அபக்குவன்) பாடல் -1
குருடான இருவர் தமக்குள் கண்ணாமூச்சு விளையாடி, இருவரும் பாழுங் குழியில் விழுந்தாற் போலப், பக்குவம் இல்லாத சிலர் தமது அறியாமையைப் போக்கும் ஆற்றலுடைய நல்ல குருவைக் கொள்ளாமல், போலிக் குருவைக் குருவாகக் கொண்டால் இருவரும் துன்பத்தில் வீழ்ந்து அழுந்துவார்கள்.
குரு
பாசத்தைக் காட்டியே கட்டுப் பறித்திட்டு
நேசத்த காயம் விடுவித்து நேர்நேரே
கூசற்ற முத்தியிற் கூட்டலால் நாட்டகத்
தாசற்ற சற்குரு அப்பர மாமே.--திருமந்திரம்: ஆறாம் தந்திரம் - 1(சிவகுரு தரிசனம்) பாடல் -2
உயிர்ச் சார்பும் பொருட் சார்புமாகிய மன இயல்பைத் தெளிவித்து, அவற்றுக்கு இடையேயான கட்டினை அறுத்து, உடற்பற்றிலிருந்து ஆன்மாவை விடுவி்த்து, இகழ்ச்சிக்கு நாணுதல் இல்லாத முத்தி நிலையை பெறச் செய்தலால், யாவராலும் போற்றப்படுகின்ற அப்பரமமே சற்குரு.