ஒரு பல்கலை கழகமும் அதன் நிர்வாக சீர்கேடுகளும்


எனக்கு தெரிந்து தமிழகத்திலேயே மட்டமான பல்கலை கழகம் என ஒன்று இருந்தால் அது சேலத்தில் உள்ள ஒரு (?) பல்கலை கழகமே. (சமீபத்தில் அங்கு பயிற்றுவிக்க ஒரு பட்ட படிப்பிற்கு அங்கீகாரமே கிடையாது என டி.இ.டி அறிவித்து விட்டது படித்தவர்களுக்கு ஆண்டுகள், பணம், முயற்சி, உடலுளைப்பு என அணைத்தும் பட்டை நாமம்) அதற்கு பிறகு தாராளமாக சிதம்பரத்தில் உள்ள ஒரு (??) பல்கலை கழகத்திற்கு இரண்டாம் இடம் கொடுக்கலாம். அவர்களின் வேலை செய்யும் திறன் அப்படி.

அங்கு படிப்பவர்களின் எண்ணிக்கை, வேலை செய்பவர்களின் எண்ணிக்கையும் சமம் என்று ஒருவர் கிண்டலாக சொன்னார். சரி நல்லது தானே எல்லா வேலைகளையும் உடனுக்குடன் முடியும் என நிணைத்தீர்கள் எனில் அது தான் தவறு.  அங்கு வேலை இல்லாதவர்களுக்கு அங்கு வெட்டி வேலைகள் “உருவாக்க படுகின்றன” போல. இன்னும் கணிணி மயமாக்க படாத ஒரே  பல்கலை கழகம் தமிழகத்திலேயே ”இது”வாக தான் இருக்கும். அங்கு சென்ற போது வேலை செய்பவர்கள் அணைவரும் பேப்பர் மலைகளுக்கு நடுவே உட்கார்ந்து கொண்டிருந்தனர். அந்த தகவல் களஞ்சியத்தை நிர்வகிப்பது தான் அவர்களுக்கு வேலை போல. ஒரு சிறந்த கணிணி மையம் 1 நிமிடத்தில் செய்ய கூடிய வேலைகளை 2 மாதம் செய்வது தான் அவர்களது ”சீரிய பணி”.

என் சோக கதைய கேளு தாய் குலமே :( !!

எனது நெருங்கிய உறவினர் ஒருவர் இப்பல்கலைகழகத்தில் ஒரு பட்ட படிப்பை படித்து எல்லா பரிட்சைகளிலும் தேறினார். எல்லா கட்டணங்களும் கட்டிய பிறகும் சர்டிபிகெட் வரவில்லை. உள்ளூர் பயிற்சி மையத்தை பலமுறை அணுகிய பிறகும் அவர்களிடம் தேவையான தகவல் இல்லை. முதல் 6 மாதம் ”எங்க  பல்கலை கழக வழக்கமே 6 மாதத்திற்குள் சர்டிபிகெட் கொடுப்பது தான் பொறுமையா இருங்க” எனும் பதில் பெருமிதமாக வந்தது.

பிறகு ஒவ்வொரு முறையும் சிதம்பரத்திற்கு போன் செய்து தான் விசாரிப்பார்கள். ஒரு முறை மழை அதனால் சிதம்பரத்தில் இண்டெர்நெட் வேலை செய்யவில்லை என பதில். பிறகு ஊழியர்கள் வேலை நிறுத்தம் என பதில் என ஒவ்வொரு முறையும் ஒரு சுவாரஸ்யமான, ஆனால் மட்டமான, காறி துப்ப கூடிய வகையில் ஒரு பதில்.

கடைசியாக அவர்களின் மாபெரும் தகவல் களஞ்சியத்தில் கண்டுபிடித்து 50 ரூபாய் கட்டணத்தில் நிலுவை என்று பதில் வந்தது. அது எப்படி ரூ 50 மட்டும் நிலுவை வருமாறு ஒரு பீஸ் இருக்கும் என புரியவில்லை. அதை பற்றி கேட்பதற்கும், திரும்ப பதில் வருவதற்கும் தகுந்த ஜந்துகள் இருக்கும் என நம்பிக்கையை இழந்து விட்டதால் கேள்வி ஏதுமின்றி 50 ரூ டிடி எடுத்து அனுப்பினேன்.

உடனே சர்டிபிகெட வந்திருக்குமே என நிணைத்தால் அது தான் தவறு. வழக்கமான பதில் “2 மாதத்திற்குள் கண்டிப்பாக வந்து விடும்”  என பொறுமை காக்க சொன்னார்கள். 2 மாதம் கழித்து டிசி மட்டும் வந்தது  டிகிரி சர்டிபெட் நஹி.

மறுபடியும் உள்ளூர் படிப்பு மையத்திற்கு படையெடுப்பு. மறுபடியும் தகவல் தோண்டல்கள். கடைசியாக ஒரு முடிவு செய்து ஒரு தீர்க்கமான பதில் சொன்னார்கள். “சார் எங்களுக்கு சரியா தெரியல. நீங்க நேரடியாக சிதம்பரம் போய் பாருங்க உடனேயே பிரச்சிணைகளை சரி செய்து சர்டிபிகெட் வாங்கி வந்து விடலாம்” என பெருமிதத்துடன் சொன்னார்கள்.

”நாயுக்கு வாழ்க்கை பட்டால் சேர்ந்து குலைச்சு தான் ஆகணும்” எனும் பழமொழியை நிணைவு படுத்தி கொண்டு மனதை திடப்படுத்தி கொண்டு சிதம்பரமும் சென்று பார்த்த அனுபவத்தின் போது தான் மேற்கண்ட ஒரு தெளிவான முடிவிற்கு வந்தேன்.

சரி போய் பார்த்த பிறகாவது பிரச்சிணை முடிவிற்கு வந்து விட்டது என நிணைத்தால் அது தான் இல்லை.

1. தகவல் மையத்தில் சேவைக்காக 5 பேர் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். அதில் ஒருவர் மட்டும் காத்திருக்கும் நூற்றுகணக்கானவரை  ஒரே வரிசையில் நிற்க வைத்து சிடுசிடுப்புடன் கண்ட படி எரிந்து விழுந்து சேவை செய்வார். மற்ற அணைவரும் அவரின் சேவையை பார்த்து வியந்து கொண்டும், நாளிதழ்கலின் செய்தியை வாசித்து கொண்டும் சேவை செய்வார்கள்.

2. உண்மையில் அவரிடம் பிரச்சிணைகளை தீர்க்க தேவையான எந்த தகவலும் இருக்காது. 1, 2ம் மாடியில் இருக்கும் காகித மேலாண்மை வாதிகளிடம் தான் இருக்கும். எழுதி வாங்கிய தகவல்களை மேலேயும் கீழேயும் கொண்டு சேர்க்க ஓட மட்டும் ஒருவர் இருக்கிறார். (இத்தணைக்கும் அவர்களுக்கு நடுவே இண்டர்காம் போன் வசதி உண்டு).

3. டிசி நிர்வாகம் செய்யும் குழு வேறு, டிகிரி சான்றிதல்  நிர்வாகம் செய்யும் குழு வேறு எனவே நீங்கள் பணம் கட்டியது எங்களுக்கு தெரியவில்லை என சொல்லி உடனேயே தற்காலிக டிகிரி சான்றிதல் அளிக்க பட்டது.

4. அதன் பிறகு நடந்தது தான் உச்ச கட்ட கொடூரம். கன்சாலிடேடட் மதிப்பெண் சான்றிதழ் கேட்ட போது உங்களின் மதிப்பெண் சான்றிதல்கள் அணைத்தையும் நகல் எடுத்து தறுமாறு கேட்டனர். ஏனெனில் அவர்களிடம் ஒரு மாணவர் அதே பல்கலைகழகத்தில் எடுத்த மதிப்பெண் தகவல்கள் கூட இல்லை போல. அல்லது எடுத்து கொடுக்க துப்பு இல்லை.

5. சரி போகட்டும் என கான்வகேசன் சான்றிதழ் கேட்ட போது அந்த மனுவை நேரடியாக வாங்க கூட மறுத்து விட்டனர். ஒரு பெட்டியில் போடுங்கள் தேவையான நடவடிக்கை “உடனே” எடுக்க படும் என பெருமிதமாக பதில் வந்தது.

6. ந”ம்ப்ப்”பி பணம் கட்டிய இரசீதையும் மனுவையும் பெட்டியில் போட்டு விட்டு வந்து இரண்டு வாரமாகிறது இன்னும் சான்றிதழ்  வரவில்லை. நேற்று சிதம்பரத்திற்கு நேரடியாக தொலைபேசியில் கேட்ட போது கிடைத்த பதில் “பெட்டியில் போட்டு இரண்டு வாரம் தானே ஆகிறது சான்றிதழ் வர இரண்டு மாதம் வரை ஆகும் பொறுமையாக இருங்க” என கடுகடுப்புடன் தொடர்பு துண்டிக்க பட்டது.

சுபமஸ்து...து..து...து...

கூடுதல் தகவல்
கான்வகேசன் சான்றிதழ் பணம் கட்ட வரிசையில் நின்ற போது, 25 வயதுள்ள சில மாணவர்கள் அதே பல்கலை கழகத்தில் வேலை செய்யும் ஒரு பெண் பேராசியரை ஆபாசமாக வசை மொழியில் கிண்டல் செய்து கொண்டிருந்தனர். விசாரித்த போது அம்மாணவர்கள் Phd படிக்கிறார்களாம் (எதிர்கால பேராசிரியர்கள் ?) ஃபீஸ் செமஸ்டருக்கு 1,10,000ருபாய். :(

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)